Sunday, August 7, 2011

பொருளாதார மாற்றுச் சிந்தனை வேண்டும்: பேராசிரியர் பிரதாப் பட்னாயக்



சென்னை காப்பீட்டுக் கழகம் ஊழியர் சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிதித்துறை பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கில் பேசுகிறார் பொருளாதார பேராசிரியர் பிர
சென்னை, ஆக.6: நிதிமூலதனம் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்கிறது என்றும், இதனால் பொருளாதார மாற்றுச் சிந்தனை வேண்டும் என்றும் பொருளாதாரப் பேராசிரியர் பிரதாப் பட்னாயக் கூறினார்.
 அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வைர விழாவையொட்டி நிதித்துறை பாதுகாப்பு சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில் நிதித்துறை சீர்திருத்தம் - எதை நோக்கி என்ற தலைப்பில் மார்க்சிஸ சிந்தனையாளரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவருமான பிரதாப் பட்னாயக் பேசினார்.
 அதன் விவரம்:
 உற்பத்தி, உழைப்பு போன்றவை மூலமே நிதி ஆதாரத்தைத் திரட்டக்கூடிய சூழல் முன்பு இருந்தது. ஆனால் இப்போது நிதியே மூலதனமாகி அதன் மூலம் மேலும் நிதியைப் பெருக்கக்கூடிய நிலை இருக்கிறது.
 இதனால் நிதி மூலதனமே நாட்டை ஆளக்கூடிய நிலையை எட்டியிருக்கிறது.
 இதற்குத் தகுந்தாற்போல்தான் சட்டங்களையும் இயற்றக்கூடிய நிலையில் மத்திய அரசு இருக்கிறது. நிதித்துறை சீர்த்திருத்த மசோதா, புதிய பென்சன் மசோதா, காப்பீட்டுச் சீர்திருத்தச் சட்டம் என்றெல்லாம் மத்திய அரசு நடைமுறைப்படுத்த முயல்வது இதனால்தான். நிதி மூலதனம் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்கிறது.
 அரசின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் தன்னாட்சி பெற்ற ஒன்றாக ரிசர்வ் வங்கி இருக்க வேண்டும் என்று நிதி மூலதனம் வலியுறுத்துகிறது. இதன் மூலம் வட்டி விகிதம், கடன் பெறும் அளவீடு என அனைத்தையும் ரிசர்வ் வங்கியே நிர்ணயம் செய்யும்.
 இதனால் எல்லாத் தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்தப் பிரச்னையை இந்தியா மட்டும் சந்திக்கவில்லை.
 எல்லா நாடுகளுமே சந்திக்கின்றன. அமெரிக்கா பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு கடன் வாங்கக் கூடாதோ அதையெல்லாம் தாண்டி கடன் வாங்கி விட்டது.
 இந்த நேரத்தில் இதையெல்லாம் தவிர்த்து மாற்றுச் சிந்தனை வேண்டும். அதை நடைமுறைப்படுத்த எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும் என்றார் அவர்.
 காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜி.ஜெயராமன், கருத்தரங்கத்துக்கு தலைமை தாங்கினார். அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளர் ஆர்.கோவிந்தராஜனும் நிதித்துறை சீர்திருத்தம் குறித்து பேசினார். பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் வரவேற்றார். இணைச் செயலாளர் டி.ரமேஷ் நன்றியுரையாற்றினார்.

 

No comments:

Post a Comment